கஜேந்திரகுமார் இரணைதீவில்:முதலமைச்சரும் இணைகின்றார்!


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்களை நேரில் சென்று சந்திக்கவுள்ளார்.வடமாகாண முதலமைச்சர் கடந்த ஒருவருடமாக தொடரும் தமது போராட்டத்தை கண்டுகொள்ளவில்லையெனவும் தமது போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கைகளை விடுத்துவந்திருந்த போதும் அது பற்றி மௌனம் காத்துவந்திருந்ததாகவும் போராட்டத்திலீடுபட்டுள்ள மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்தனர்.
இந்நிலையிலேயே தற்போது வடக்கு முதலமைச்சர் போராட்டகளமான இரணைதீவிற்கு நேரில் சென்று போராட்டத்திலீடுபட்டுள்ள மக்களை சந்திக்கவுள்ளதாக முதலமைச்சர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இன்று இரணைதீவு மக்களைச் சந்றித்ததுடன் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் வழங்கியுமுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களென பலரும் அங்கு பயணம் செய்து போராட்டத்திலீடுபட்டிருந்த மக்களை சந்தித்து உரையாடி தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரணைதீவு பகுதியை விடுவிக்க கோரி அப்பிரதேச மக்கள் உள்ளிருப்பு போராட்டமொன்றை அங்கு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments