சிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்


போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு போர் வீரருக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடந்த, சிறிலங்கா படையினரை நினைவு கூரும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“போர்க்காலம் என்பது, இயல்பான நேரம் அல்ல. போர் மனிதாபிமானம் அற்றது. அது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம். போர்க்காலத்தில் சட்டம் அமைதியாகிவிடும். விடுதலைப் புலிகளிடம் இருந்து தாய்நாட்டைக் காப்பாற்றுவதற்காக போரிட்ட சிறிலங்கா படையினர் எந்தக் குற்றங்களை இழைத்திருந்தாலும், அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும். போரின் இறுதிக்கட்டத்தில் குற்றங்களை இழைத்தார்கள் என்று எமது படையினருக்கு எதிராக அநியாயமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை அடிப்படை ஆதாரமற்ற பொய்கள். பல பொதுமக்களை சிறிலங்கா படையினர் காப்பாற்றியுள்ளனர். போர்க்காலத்தில் நடந்த குற்றங்களுக்காக, எந்தவொரு நாடும் சட்ட நடவடிக்கை எடுத்ததில்லை. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் இரண்டு நகரங்களான ஹிரோஷிமாவும், நாகசாகியும் முற்றாக அழிக்கப்பட்டன. அதற்குக் காரணமான குற்றவாளிகள் மீது யாரும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்றும் அவர். தெரிவித்துள்ளார்.

No comments