திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பில் நல்லாட்சியும்!


தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும் வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புக்களையும் கபளீகரம் செய்வதற்கு கழுகுகள் எம்மைச் சுற்றிவட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. நாமோ எதையும் உணராதவர்களாக வாளாமடந்தைகளாக சிறுசிறு மகிழ்ச்சிக்கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோமென கவலை தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

வன்னி பல்லவராயன் கட்டு பகுதியில் அறஞ்செய விரும்பு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட வறிய மாணவர்களிற்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மிகப் பெரியநிலப்பரப்பைக்கொண்ட வன்னிப்பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புக்கள் கேள்விக் குறியாக்கப்படுவதற்கான முத்தாய்ப்பு நடவடிக்கைகள்,பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ் இரகசியமாகவும், தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டுவருவது எம்மால் உணரக்கூடியதாக உள்ளது.ஆனால் அதனை எந்த அளவுக்கு எம்மால் கட்டுப்படுத்தமுடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.


இந்த இரகசிய நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் நாம் எம்மால் முடிந்தவரையில் அல்லும் பகலும் முயன்றுவருகின்றோம். எமது முயற்சிகளுக்கு அவ்வப்பகுதிகளில் உள்ள மக்களின் உதவி ஒத்தாசைகள் அவசியம் தேவைப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரியநினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுக்களையும் அகழ்ந்துவிட்டு பேரினவாத மக்களின் கலாச்சாரச் சின்னங்களை வேண்டுமென்றே புதைத்து வைப்பதன் மூலம் சிலகாலங்களின் பின்பு இது தமிழர்களின் வாழ்விடங்கள் அல்ல,பெரும்பான்மை மக்கள் வாழ்ந்த பிரதேசம் என்று கூறும் இவ்வாறான கபட நாடகங்கள் இரவோடு இரவாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.கோயில் விக்கிரகங்கள் களவாடப்படுகின்றன.

தமிழ்மக்கள் விழிப்பாக செயற்படவேண்டிய காலம் இதுவாகும். அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவுகளும் நடவடிக்கைகளும் கவனமாக உற்று நோக்கப்பட வேண்டும். கபடநோக்கில் மேற்கொள்ளப்படக்கூடிய விடயங்கள் பற்றி உங்களது மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவோ அல்லது எமக்கு நேரடியாகவோ அறியத்தரும் பட்சத்தில் அவ்வாறான நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது வெளிநாடுகளுக்கு படம் பிடித்துக் காட்டுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுக்கமுடியுமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments