வெளியாகியது மூச்சுத்திணறல் குறித்து ஜெயலலிதா உரையாடிய ஒலிப்பதிவு


தியேட்டரில் முதல் வரிசையில் இருக்கும் ரசிகன் விசிலடிப்பது போல் எனக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது என ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்   குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா தனக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் குறித்து பேசிய ஆடியோ பதிவை, மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார்

அது போல் 2016 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு, ஜெயலலிதா தினந்தோறும் எடுத்துக்கொண்ட உணவு வகைகள் பட்டியலும் அதில் இடம்பெற்று உள்ளன. அவை ஜெயலலிதாவே கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் ஆகும்.   2016 ஆகஸ்ட் 2ஆம் தேதி ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் அது

* காலையில் ஒன்றரை இட்லி, 4 ரொட்டி துண்டுகள், காபி, இளநீர், ஆப்பிள், பிஸ்கட் சாப்பிடுவதாக எழுதியுள்ளார் 

* மதிய உணவாக சாதம், தயிர், முலாம்பழம், சாப்பிடுவதாக ஜெயலலிதா எழுதியுள்ளார்

* இரவு உணவாக உலர் பழங்கள், இட்லி உப்புமா, தோசை, ரொட்டி, பால் சாப்பிடுவதாக எழுதி வைத்துள்ளார் ஜெயலலிதா

2016 செப்.27ஆம் தேதி ஜெயலலிதா பேசிய  பதிவு வெளியிடப்பட்டு உள்ளது. தனக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் குறித்து ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது. 52 விநாடிகள் கொண்ட ஆடியோவில்  மூச்சுத்திணறலை உணர்ந்தது எப்படி என ஜெயலலிதா பேசி உள்ளார்.  தனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்று ஜெயலலிதா கேட்கிறார்; அதற்கு அப்போலோ மருத்துவர் அர்ச்சனா 140/80 இருக்கிறது என்று பதிலளிக்கிறார்.

ஜெயலலிதா இது எனக்கு நார்மல்தான் என்கிறார். ரத்தம் எடுக்க முடிய வில்லை என்றால்  விட்டுவிடுங்கள் என கூறுகிறார்

தியேட்டரில் முதல் வரிசையில் இருக்கும்  ரசிகன் விசிலடிப்பது போல் எனக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது என ஜெயலலிதா கூறி உள்ளார்.

No comments