எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது


அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், Tanjung Gemuk துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த Etra என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 130 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே முதலாம் நாள், காலை இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுபற்றிய தகவல்களை மலேசிய காவல்துறை நேற்று மாலையே வெளியிட்டுள்ளது. இந்தக் கப்பலில் இருந்த அனைவரும் இலங்கையர்களாவர். அவர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், 5 சிறுமிகள் உள்ளிட்ட 9 சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.
இவர்களை கப்பலில் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், இருந்த மூன்று இந்தோனேசியர்களும், நான்கு மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கான ஒழுங்குகளைச் செய்த 5 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments