ஹபாயா விவகாரத்தை ஆராய உயர் மட்டக்குழு நியமிப்பு!!


திருகோணமலை சன்முக வித்தியால முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் ஹபாயா அணிவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு, உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் குறித்த பாடசாலையில் மத வரையறைக்குட்பட்ட ஆடைகளை முஸ்லிம் ஆசிரியர்கள் அணிவதில் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை இன்று சந்தித்து எடுத்துக் கூறினர். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் உறவு நீண்ட காலமாக நல்ல விதமாக நீடித்து வரும் நிலையில் இச்சம்பவத்தினால் சில மனக்கசப்புகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என்று அமைச்சர் ஹரீஸ், கல்வி அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது முகத்தை வெளிக்காட்டிய நிலையில் ஹபாய ஆடை அணிவதற்குப் பிரச்சினை இல்லை. இது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

No comments