நினைவில் என்றும் ஜொனி.!

லெப்.கேணல் ஜொனியின் முப்பதாவது நினைவுதினம் வந்துள்ளது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக(?) நாடு, அகிம்சை காந்தியின் தேசம், கருணை சொன்ன புத்தர் பிறந்தபூமி என்ற வரலாற்று அடைமொழிகளுடன் வலம் வரும் இந்திய தேசம் எமது போராட்டத்தின்மீது நிகழ்த்திய மோசமான துரோகங்களில் மிகவும் மோசமான ஒன்று ஜொனியின் கொலை...


உலகின்பெரும் இராணுவங்களில் ஒன்று, பிராந்தியத்தில் வைத்தது எல்லாமே சட்டம் என்ற வல்லாதிக்க பலத்தின் முன் ஒரு இளைஞன் எதற்கும் பணியாமல் நிற்கின்றானே எந்த பதட்டத்தில்,கோபத்தில்,
கோழைத்தனத்துடன் நிகழ்த்தப்பட்டதே ஜொனியின் கொலை...அதுவும் இரண்டு பெரும்போர்களை பாகிஸ்தானுடன் நிகழ்த்தி அதில் வெற்றியும்கண்டு கிட்டத்தட்ட ஒருலட்சம் பாகிஸ்தான் இராணுவத்தை சராணாகதி அடையவைத்து கைது செய்து பிராந்தியத்தின் பெரிய பலவான் என்ற மமதையில் அலைந்த பாரத தேசபடைகளின் முன்னால் ஒரு சிறிய விடுதலை அமைப்பு வீரமுடன் சரணாகதி அடையாமல் போராடுவதை சகிக்க முடியாமல் செய்த கொலைதான் ஜொனியின் கொலை.
அதேவேளை அந்த பெருங்காட்டினுள் நீட்டிய துப்பாக்கிகளுடன் கோழைத்தனமாக சுற்றிவளைத்து நிற்கின்றார்கள் என்று தெரிந்துகொண்டும் தனது தாயகவிடுதலை, அதற்காக உறுதியுடன் போராடும் தனது அமைப்பு, அதனை வீரமுடனும் நேர்மையுடனும் வழிநடாத்தும் ஒப்பற்றதலைவன் என்பனவற்றின் மீதான தனது ஆழமான பற்றுறுதியை வெளிப்படுத்தியபடியே சாவை தழுவிய ஜொனியின் வரலாறு உன்னதமானது- விடுதலைப் போராட்ட அமைப்பை கட்டியெழுப்பும் கனவுகள் நிறைந்தவை அவை..
அப்படி ஒரு கனவுடன் வந்தவன்தான் ஜொனி... 80களின் ஆரம்பகாலம்...82 என்றே நினைவு..
சுதாகர்தான் ஜொனியை முதலில் அறிமுகப்படுத்தியவன். ஐடியா வாசுவின் சொந்தப் பெயர்தான் சுதாகர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பங்களில் இருந்தே நெருக்கமான தொடர்புகளையும் வேலைகளையும் செய்து கொண்டிருந்த சுதாகர், பேராதனைப் பல்கலைகழகத்துக்கு விஞ்ஞான பீட மாணவனாக சென்றதுகூட இயக்கத்தின் வேண்டுகோளுக்காகவே..
மருத்துவர், பொறியியலாளர் அதுவும் இல்லையென்றால் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு,அதுவும் இல்லையென்றால் கணக்காளர் என்று பதவிகளில் அமர்ந்து கைநிறைய சீதனம்வாங்கி மணமுடித்து வாழ்வதுதான் ஒப்பற்ற வாழ்க்கை வட்டம் என்று கருதி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் தாயக விடுதலை எவ்வளவுக்கு தனிமனித வாழ்வுக்கும் மனித ஆளுமைக்கும் மிகவும் தேவை என்றும்,  அதனை அடையாமல் எதுவுமே சாத்தியம் இல்லை என்றும் புரியவைக்க வேலை செய்தவர்களில் சுதாகர் முக்கியமானவன்.
விடுதலைக்காகவே கற்றவன் அவன்.  பேராதனை பல்கலைகழகத்துள்ளும் அவனது செயற்பாடுகள் நடந்தன. அதில் வடிகட்டி வடிகட்டி சிலரை அறிமுகப்படுத்தினான்.
1982ல் அப்படியான ஒரு பல்கலைக்கழக விடுமுறைக்காலத்தில்தான் சுதாகர் ஜொனியை காட்டினான். சிரிக்கும்போதே ஜொனியின் இடைவெளி விழுந்த முன்பற்கள் இன்னும் கவர்ச்சி கூட்டும். முதலாவது சந்திப்பிலேயே ஜொனியின் விடுதலை சம்பந்தமான புரிதல் மிகவும் காணக்கூடியதாக இருந்தது.
இப்படி முதலாவது சந்திப்பிலேயே தமது ஆளுமையை,தம் மீதான நம்பிக்கையை வெளிபடுத்தியவர்கள் மிகக்குறைவு. ஜொனி அதில் ஒருவன். பிறகு என்ன..தொடர்ச்சியான சந்திப்புகள்....சீலன், லாலாரஞ்சன், பசீர் காக்கா என்று ஏராளம் சந்திப்புகள் ஜொனியுடன்..
கிட்டு அப்போது இந்தியாவில் தலைவருடன் நின்றிருந்த நேரம்.
ஜொனிக்கு பண்டிதரையும், சீலனையும் ஆழமாக பிடித்து போயிற்று........ஜொனிக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. வெற்று மேடைப்பேச்சு தலைவர்களை  கண்டு பிறந்த ஒரு தலைமுறையினன் அவன்.
தங்களையே ஆகுதி ஆக்கும் ஆன்மவலு நிறைந்த வீரர்களை முதன்முதலில் கண்டதும் அவர்களுடன் கதைத்ததும் அவனுள் ஏராளம் மாற்றங்களை ஏற்படுத்தியது..
மூன்றோ நான்கு பெண் சகோதரிகளுடன் பிறந்த ஜொனிமீது அளவற்ற அன்பை பொழியும் ஒரு குடும்பம் இருந்தாலும் அவனுக்கு என்று இருந்த குடும்ப பொறுப்பை அவன் உயர்ந்திருந்தாலும் விடுதலைக்கான வேலைகளில் ஈடுபடுவது மிகமுக்கியமானது என்று அவன் புரிந்திருந்தான்......
ஆனாலும் சீலனினதும் பண்டிதரதும் வேண்டுகோளுக்கு இணங்க அவன் தனது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்தபடியே எங்களுக்காக,விடுதலைக்காக வேலை செய்தபடியே இருந்தான்....
அவன் படிப்பில் கவனம் செலுத்திய அளவுக்கு விடுதலையில் அதனைவிட அதிகம் கவனமாக உறுதியாக அப்போதே இருந்தான் என்பதற்கு இன்னொரு உதாரணம்....
ஒருமுறை விடுமுறையில் வந்திருந்த ஜொனி பண்டிதரை சந்திக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தான். ஏனென்றால் தலைவர் இந்தியாவில் நின்றிருந்த அந்த காலங்களில் முடிவுகளை எடுப்பதில் பொறுப்பு உள்ளவராக பண்டிதரே இருந்தான் என்பதாலேயே... பண்டிதரை சந்தித்த ஜொனி கொடுத்த ஒரு திட்டநகல் எல்லோருக்கும் மிகவும் உற்சாகமளிக்கும் ஒன்றாக இருந்தது.
அந்த நேரம் சிங்கள தேசத்தில் ஏதோ ஒரு அமைச்சராக இருந்த பேரினவாதியான காமினி திசாநாயக என்பவர் மகாவலி அமைச்சராக இருந்தார். அவர் மகாவலியை கிழக்குக்கு திசைதிருப்புவது அது இது என்று எண்ணற்ற திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்தார்.
ஆனால் இந்த திட்டங்களின் பின்னுக்கு தமிழர்களின் பாரம்பரிய பூர்வீக மண்ணை கிழக்கில் சிங்கள நிலமாக்கும் சதி இருந்தது என்றும் அதனை எமது விடுதலை அமைப்பு என்னவிதமான செயற்பாடுகளால் நிறுத்தலாம் என்றும் ஒரு விரிவான திட்டம் அது. ஜொனி மீதான நம்பிக்கையை போராளிகளுக்கு இன்னும் அதிகரித்திருந்தது....
குடும்பத்தின் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அவன் பல்கலைகழகத்தில் படித்து கொண்டிருந்தாலும் தமிழீழவிடுதலை என்பதே அவனது சிந்தனையாக முழுதும் இருக்கின்றது என்பதை உணரவைத்த நிகழ்வு அது.......
1983யூலை இனப்படுகொலையானது ஜொனியை முழுநேரமாக விடுதலைக்காக உள்நுழைய வைத்தது...
மெதுமெதுவாக ஆனால் அதே நேரம் உறுதியான ஒரு விடுதலைஅமைப்பை கட்டியெழுப்பும் எமது திட்டங்களை உடைத்தெறிந்து இந்தியா தனது பயிற்சி என்ற வலையை விரித்திருந்த நேரம்...
வளர்ச்சியை விட மோசமானது வீக்கம். திடீரென்ற வீக்கம் போராட்டத்துக்கு ஆரோக்கியமற்றதென்பதே தேசியதலைவரின் கருத்தாக இருந்தது.... ஆனால் இந்தியாவின் வஞ்சகதிட்டம் என்பது ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்த அமைப்புகளை எல்லாம் பயிற்சி அளித்து ஈழத்துக்குள் அனுப்பி அதனை ஒரு இன்னொரு லெபனான் ஆக்குவதாகவே இருந்தது.
அசாம், மணிப்பூர், நாகலாந்து, காஸ்மீர், மிசோரம் போன்ற மாநிலங்கள் இந்தியாவுக்குள்ளேயே விடுதலைக்காக போராடும்போது எப்படி இந்தியா  தமிழீழ விடுதலையை உளப்பூர்வமான நேர்மையுடன் ஆதரிக்கும் என்பதில் எப்போதும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு நம்பிக்கையே இருந்தது இல்லை.
ஆயினும் நாம் அந்த பயிற்சி திட்டத்தினுள் இணையாது விட்டால்.. இரண்டு இலக்கமுடைய உறுப்பினர்களை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பை தான் பயிற்சி அளித்து ஈழத்தில் இறக்கிவிடும் பொம்மை அமைப்புகளை வைத்தே அழித்துவிட்டு அதன்பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இந்திய வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலின்படியே நடக்கும் ஒன்றாக ஆக்கி இறுதியில் அழித்து விடுவார்கள் என்பதை கணித்துக் கொண்ட தேசிய தலைமை பயிற்சியை ஏற்பதென்றும் அதுவும் எமது நம்பிக்கைக்குரிய தளபதிகளின் தலைமையிலேயே பயிற்சிஅணிகள் செல்வதென்றும் தீர்மானமாயிற்று...
ஜொனியும் அதில் ஒருவனாகவே செல்வதாக இந்தியா அனுப்பட்டான். தொலைதொடர்பு வேலைகளை கற்றுக்கொண்டு தாயகம் திரும்பிய ஜொனி கிட்டுவின் இன்னொரு கரமாகினான்.
ஜொனிக்கும் ஐடியா வாசுவுக்கும் அப்படி ஒரு புரிந்துணர்வும் தோழமையும். யாழ்மாவட்டத்தில் மட்டுமல்லாமல் மன்னாரிலும் ஒருமுறை தென் தமிழீழத்திலும் ஜொனியின் தாக்குதல்கள் நடந்தேறின...
கூர்மையான அவதானம், எப்போதும் எந்த நிலையிலும் பொறுமை,அமைதி, தாக்குதல்களில் தேவைக்கேற்ப அதிவேகம் என்பதே ஜொனியின் சிறப்புகள்...
மிகவிரையில் முதன்நிலை தளபதிகளின் அடுத்தவரிசை தளபதியாக ஜொனியின் பொறுப்புகள் அதிகரித்தன...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன்முறையாக ஒரு நிலப்பரப்பை மீட்டெடுத்து அதில் சிங்களபடைகளை முகாம்களுக்குள் முற்றுகையில் வைத்திருந்ததன் தொடக்கமான யாழ் சிறீலங்கா காவல்நிலைய தாக்குதலிலும் அதன் பின்னர் யாழ்குடாவை மீட்டெடுத்ததிலும் ஜொனியின் பங்கு அபாரமானது..
அதன்பின்னர் எமது மக்களமத்தியில் சுயசார்பு தொழில்களை ஊக்குவிப்பதில் முன்மாதிரியான தும்பு தொழிற்சாலைக்கு ஜொனியின் வழிகாட்டல்கள் ஏராளம். மக்கள் மத்தியில்  உபஅமைப்புகளை கட்டியெழுப்புவதிலும் அவனது பங்களிப்புகள் எழுதி மாளாது.
எல்லா அமைப்புகளையும் பயிற்சிகொடுத்து கொம்புசீவி ஈழத்துள் அனுப்பி மோத வைத்து தமிழீழம் என்பதையே கருத்தியல் ரீதியாக அழிக்கும் இந்தியாவின் திட்டங்கள் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் போன்றவற்றின் மீதான விடுதலைப் புலிகளின் தடை நடவடிக்கையால் தவிடுபொடி ஆகி விடுதலைப்புலிகள் அமைப்பே மக்கள் ஆதரவுடனான ஒரே அமைப்பு என்ற நிலை தோன்றியதும் இந்தியா தானே களம் இறங்க திட்டமிட்டு அமைதிப்படை என்ற பெயரில் குதித்தது.
இந்தியாவுடனான மோதல்கள் ஆரம்பமாகின. இருபத்துநான்கு மணித்தியாலத்துக்கு இடையில் ஊதி அழித்துவிடுவுhம் என்றவர்கள் பெரும் பாடங்களை பெரும்இழப்புகளுடன் ஈழத்தில் கற்றுக்கொண்டு இருந்த நேரத்தில் ஜொனி தமிழகம் வருகிறான்.தலையில் பெருங்காயத்துடன்...
இந்தியபடைகள் தமிழீழமக்கள்மீது நடாத்தும் காட்டுமிராண்டிதனமான தாக்குதல்களை தமிழகமக்களுக்கு வெளிப்படுத்தும் வேலைகளை அதன் ஊடாக எமது விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதில் அங்கும் அவனது வேலைகள் தூக்கம் மறந்து இரவுபகலாக.
ஏராளம் முக்கியமானவர்களை தமிழகத்தில் சந்தித்து கதைத்தான். தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனை சந்திப்பதற்கான அவனது முயற்சிகள் எம்.ஜி.ஆரின் சுகயீனம் காரணமாக பலதடவை ஒத்தி போடப்பட்டு இருந்தாலும் அவருக்கு பதிலாக இன்றைக்கு தமிழ் நாட்டின் மிகமுக்கியமான ஒருவருடன் ஜொனியின் சந்திப்பு நிகழ்ந்தது. அப்படி அவன் தனது தலை நோவையும் பொருட்படுத்தாமல் விடுதலைக்காகவே அலைந்து திரிந்தவன்.
இந்தநிலையில்தான் இந்தியாவில் இருந்த கிட்டுவுக்கு எமது அமைப்பின் புலனாய்வுதளங்களால் ஒரு செய்தி அனுப்படுகிறது. மணலாறு முற்றுகை இறுகுகிறது. எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். பெருந்தொகை இந்தியப் படைகள் காட்டின் விளிம்பில் உள் இறங்க நிற்கிறார்கள் என்பதே அதுவாகும். அதே நேரம் கிட்டுவை சந்தித்த இந்திய அரச தரப்பு அதிகாரிகளும் அதனையே வித்தியாசமாக கூறினர்.
“ஒப்பிரேசன் செக்மேட்” ஒன்றில் தமிழீழ தேசிய தலைமையை அழித்த பின் அல்லது பிடித்த பின்னரே முடிவுக்குவரும் என்றும் அதுவரைக்கும் இந்த தாக்குதல் ஒருபோதும் நிறுப்படாது என்று தெரிவித்தார்கள்.
உண்மையில் கிட்டு இவற்றை கேட்டு அதிர்ந்து போய்விட்டான். தமிழீழ விடுதலைப் போராட்டமானது தேசிய தலைவர் என்ற ஒற்றை மனிதனது நேர்மையானதும், உறுதியானதுமான வழிகாட்டலுக் கூடாகவே முன்னகர முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த கிட்டு அந்த தலைமையை இல்லாது செய்ய நினைக்கும் இந்திய திட்டங்களை எவ்வாறு நிறுத்தலாம் எனபதில் கவலையுடனான வேகம் காட்டினார்.
தலைவருடன் நீண்ட தகவல்பரிமாற்றங்களை நிகழ்த்தினார்.
நடைபெற்றுக் கொண்டிருந்த பாரிய இந்தியபடை நடவடிக்கைகையில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதற்காக இந்திய தரப்புடன் கதைப்பதற்கு அனுமதியும் வேண்டினார்.
ஆனால் தலைவர் மிகதெளிவாக தனது நிலையை கூறிவிட்டார்.எந்தவொரு தருணத்திலும் சரணாகதி, அல்லது தமிழீழஇலட்சியத்தை கைவிடுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லிவிட்டார்.
இந்தியா ஏமாற்றும் என்பதில் தலைவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். கிட்டுவுக்கும் அதனையே சொன்னார்.  அவர்களுடன் கதைக்கும் நேரத்துக்கு அங்கிருக்கும் எமக்கு ஆதரவான சக்திகளுடன் கதை என்றும் சொல்லிப பார்த்தார்.
ஆனால் கிட்டு எப்படியும் பேச்சு நடாத்தி இந்த படைநடவடிக்கையினை இடைநிறுத்தி அதனூடாக ஒரு மீள்இணைப்பை செய்ய நினைத்தார்.
தினமும் செய்திகள் வந்தவண்ணமிருந்தன.இதோ நெருங்கி விட்டார்கள்.அதோ என்று.. தமிழகத்தில் கிட்டுவுடன் கதைத்த இந்தியஅரச தரப்பினர் ஏராளம் நிபந்தனைகள் விதித்தார்கள்.
எந்தவொரு நிபந்தனைக்கும் தமிழீழவிடுதலைப்போராட்டம் அடங்காது என்பது சொல்லியாயிற்று.
ஆனால் இறுதியாக ஒரு இடைக்கால திட்டம் கிட்டுவுக்கு சொல்லப்பட்டது.அதற்கான உத்தரவாதம் தேசியதலைமையிடமிருந்தே வரவேண்டும்.அதற்காக கிட்டு தனது நம்பிக்கைக்குரிய ஜொனியை அனுப்பினான்.
மிகவும் சதி எண்ணத்துடன் தலைவரின் இருப்பிடத்தை அறிய எடுத்த முயற்சி கிட்டுவின் சாதுரியமான அறிவுறுத்தலால் ஜொனியால் முறியடிக்கப்பட்டு அந்த வலைக்குள்ளாகவும் தலைவரை சந்தித்து மீளும்போது அந்த மகத்தான வீரன் கோழைத்தனமாக தேவிபுரத்தில் வைத்து இந்திய கோழைத்தனமான படைகளால் கொல்லப்பட்டான்.
எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற எரிச்சலும், விடுதலைப் புலிகளின் தளராத வீரமிகு போராட்டம் தந்த இழப்புகளும் அந்த கோழைகளை இப்படி செய்ய தூண்டிற்று...
ஜொனி ஒரு பெரும் வரலாற்றுக்கு சொந்தகாரனாக அந்த வீரமிகு நிலத்தில் வீழ்ந்துவிட்டான்.
எல்லா உரிமைப் போராட்டங்களும், விடுதலைப் போராட்டங்களும் வரலாற்றில் இப்படியான துரோகங்களையும் சதிகளையும் சந்தித்து கடந்தே தமது விடுதலையை பெற்றிருப்பதை சரித்திரத்தில் பார்க்கலாம்.
ஆனாலும் எங்களின் விடுதலைப் போராட்டத்தில் இது கொஞ்சம் அதிகம்.மிக அதிகம்... துரோகங்களால் எம்மை வீழ்த்துவதில் எதிரிகள் எப்போதும் அக்கறையுடனே செயற்படுவார்கள்.
அதனை மீறி அதற்குள்ளாக மீண்டும் எப்படி துளிர்ப்பது மீண்டும் எப்படி எழுவது என்பதை விடுதலைக்கான மக்களாகிய நாம்தான் எப்போதும் கவனிக்க வேண்டும்.
ஜொனியின் வீரமரணம் எமக்கு சொல்லும் சேதியும் அதுதான்.
அவன் ஓய்வற்ற ஒரு பெரும் போராட்டத்தின் இயங்குசக்தியாக இருந்தவன்.அவனின் வீரமரணம் என்பது அவனது நினைவுடன் என்றென்றும் எழும் பெரும் சக்தியை எமக்களிக்கட்டும்.
ச.ச.முத்து

No comments