வலி.வடக்கில் 683 ஏக்கர் காணிகள் 16ஆம் நாள் விடுவிப்பு – சிறிலங்கா இராணுவம் உறுதி


யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படவுள்ளாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். “மயிலிட்டி உள்ளிட்ட 4 கிராம அதிகாரி பிரிவுகளில் உள்ள இந்தக் காணிகள், வரும் 16ஆம் நாள், யாழ். மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படும். காணிகளை விடுவிப்பதால், பாதுகாப்பில் பாதிப்புகள் ஏற்படுமா என்று மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வலி.வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட காணிகளின் வரைபடங்கள் இன்னமும் தமக்கு அனுப்பப்படவில்லை என்றும், எனவே வரும் 16ஆம் நாள் காணி விடுவிப்பு நடைபெறுமா என்பது சந்தேகமே என்று யாழ். மாவட்டச் செயலக அதிகாரிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments