சுற்றுலாவை ஊக்குவிக்கும் முதலமைச்சர்!

நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கும் உள்;ர் உற்பத்திகளுக்கு நல்ல சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சுற்றுலாத்துறை பெரிதும் உதவுகின்றது.இப் பகுதிகளில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் விளைவாக இப் பகுதிகளுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகக் குறைந்திருந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இயற்கை எழில் மிகுந்த பல சுற்றுலா மையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றின் புனரமைப்புப் பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுவதற்கு வடமாகாண சபையின் நிதி வளப் பற்றாக்குறை ஒரு மூல காரணமாக அமைந்திருக்கின்றது. எனினும் இத் துறைகள் விரிவுபடுத்தப்படுவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்க வேண்டியது எமது கடப்பாடாகுமெனவும் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும்சுற்றுலாப் பயணிகள் இந்த நீர் நிலைகளை அண்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலா மையத்தில் அமர்ந்திருந்து இப் பகுதிகளில் காணப்படக்கூடிய பறவை இனங்களைக் கண்டு களிப்பதற்கும் மலைப்பாங்கான குன்றுகளும் மண்மேடுகளும் உள்ள இப் பகுதிகளில் காலாற நடந்து செல்வதற்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் ஏற்றவாறு நாம் அவற்றை அமைத்துள்ளோம்.சிறு குழந்தைகள் மகிழ்ந்திருப்பதற்கான பூங்கா அமைப்புக்களும் உடையதாக இப் பகுதி விளங்குகின்றது. சுற்றுலா பயணத்தில் ஈடுபடுகின்ற அனைத்துத்தர மக்களுக்கும் இவ்விடம் ஏற்புடையதாக இருக்கும் என எண்ணுகின்றேன். 

சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படும் அதே நேரத்தில் எமது பாரம்பரியங்களும் கலை பண்பாட்டு விழுமியங்களும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் பேணப்பட்டுவரும் வகையில் எமது அபிவிருத்திப் பணிகள் அமைய வேண்டும். தற்கால சூழ்நிலையில் மேலைத்தேய நாகரீகம் எமது மக்களை கவர்ந்துள்ள நிலையில் எமது நடை உடை பாவனை அனைத்தும் இங்கு பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளதெனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

No comments