வலிகளின் சுமைகளுடன் கிளி. யிலிருந்து புறப்பட்டது தீப ஊர்தி!


முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், தீபமேந்திய ஊர்தி பவனியும் இடம்பெற்றுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் தீபமேந்திய ஊர்தி பவனிக்கு தீபமேந்தி மலரஞ்சலி செலுத்தினார்கள். முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்திக்காக, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆத்ம சாந்தி பிராத்தினை நேற்றும் இடம்பெற்றது. ஆத்மசாந்தி பிரார்த்தனையில் பொதுச் சுடரேற்றப்பட்டு பின்னர் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஒட்டுக்குழுவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் அவ்வமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் தீபமேந்திய ஊர்தி பவனி தனது மூன்றாவது நாள் பயணத்தை இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்தது. இதன்போது கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இணைப்பாளர் கலாரஞ்சினி சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி, வீரம் விளைந்த மண்ணான வல்வெட்டித்துறையில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. சுடரேந்திய வாகனம் மன்னார், வவுனியாவின் பல பகுதிகளிற்கு இன்று சென்றடையவுள்ளது. தொடர்ந்து நாளை முள்ளிவாய்க்கால் நோக்கி பயணிக்க உள்ளமை குறிப்பிடதக்கது.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையை நினைவுக்கூறும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் இரத்த தான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையினை நினைவுகூரும் முகமாக கிழக்குப் பபல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற்றது. கிழக்குப் பலக்லைக்கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த நுற்றுக்கணக்கான மாணவர்கள் இதன்போது இரத்த தானம் வழங்கியதுடன் இரத்த தான முகாம் நாளை வெள்ளிக்கிழமையும் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments