செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை


செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில் , 

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.100 நாட்களைத் தாண்டி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும்,  இவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி  அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால் இதுவரை இல்லை.

முக்கியமாக, இந்த என்புக்கூடுகளுடைய  டி.என்.ஏ (DNA)  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு , காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும். 

 அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை என்பதும்; அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும் உண்மையானது. அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது கையளிக்கப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு உட்பட்ட வகையில், அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும் நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக் குறைவு என்ற அடிப்படையில், ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து, இது வரையில் எடுக்கப்பட்ட என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை  அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். என தெரிவித்தார்

No comments