ஈஸ்டர் தாக்குதல்: நெருங்கும் கத்தி!

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் இராணுவ புலனாய்வு பிரிவின் பின்னணி தொடர்பில் மேலும் புதிய தாகவல்கள் வெளிவந்துள்ளது.

தாம் முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, இலங்கை இராணுவத்தின் வவுனியா பிரிவிலிருந்து புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய ஒரு குறிப்பேட்டைப் பறிமுதல் செய்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட புலனாய்வுக் குறிப்பேட்டிற்குப் பொறுப்பாளராக இருந்த லெப்டினன்ட் கேணலிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கோட்டை நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை புலனாய்வு அதிகாரிகளான யாசீன் பாவா, ஜெகில் பாஸ் மற்றும் சரத் சமந்த ஆகியோரை செப்டம்பர் (02) வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments