கீரிமலையில் பள்ளங்களுக்குள் குப்பைகளை தள்ளிவிட கனரக வாகனங்களுடனும் , கடற்படையினருடனும் வந்த வலி. தெற்கு பிரதேச சபை
கீரிமலை பகுதியில் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளாது பள்ளபகுதிக்குள் தள்ளிவிட வந்த வலி.தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்
வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழ்ந்த பாரிய பள்ளங்களில் வலி. தெற்கு பிரதேச சபையினர் இலத்திரனியல் கழிவுகள் , மருத்துவ கழிவுகள் , இறைச்சி கழிவுகள் என பல்வேறு வகையாக கழிவுகளையும் கொட்டி சென்றனர்.
இது குறித்து வலி. வடக்கு பிரதேச சபையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் , வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் , சுற்றாடல் அதிகார சபையினர் . மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் என பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு அளித்துள்ளனர். அத்துடன் வலி. தெற்கு பிரதேச சபையினர் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளி செல்ல வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இந்நிலையில் வலி. தெற்கு பிரதேச சபையினர், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடற்படையினரின் உதவியுடன் கனரக வாகனங்களில் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு வந்து , கொட்டப்பட்ட குப்பைகளை குறித்த பள்ளங்களுக்குள் மேலும் தள்ளி விட முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் அறிந்த வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து , கொட்டப்பட்ட குப்பைகளை மீண்டும் மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர , அவற்றை மேலும் பள்ளத்தினுள் தள்ளுவதில்லை என அவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்தி , அவர்களை திருப்பி அனுப்பினர்.
இது தொடர்பில் , சுற்றாடல் அதிகார சபையினருக்கும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக முறைப்பாடு அளித்துள்ளனர்.

Post a Comment