பிள்ளைகள் போதைக்கு அடிமையா ? மருந்தகங்களில் விற்பனைக்கு வரவுள்ள விசேட சோதனைப் பொதி
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது.
நச்சுப் போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டுச் சபை, முப்பீட மகா சங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்களின் பங்கேற்புடன் ஜனாதிபதி செயலகத்தில் கூடியதுடன், இதன்போது இந்தத் தீர்மானம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் நவீன வசதிகளை ஏற்படுத்துதல், இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பணிகளைத் திறம்படச் செய்தல், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நவீன தொழில்நுட்ப முறைகளைக் கையாளுதல் மற்றும் நச்சுப் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் தயாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதுடன், அதனை விரைவில் வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment