செங்கடலில் சவூதி எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக யேமனின் ஹூதிகள் கூறுகின்றனர்
ஈரானுடன் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி இயக்கம், செங்கடலில் இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளது. இத் தாக்குதலானது உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றைச் சுற்றியுள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சவூதி அரேபியா மீதான ஹூத்தி கடற்படை முற்றுகையை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், என்செலியா மற்றும் லைலா ஆகிய கப்பல்கள் மீது பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதிகள் அறிவித்தனர்.
சவுதிக் கொடியை ஏந்திய என்செலியா என்ற எண்ணெய் கப்பல், சவுதி துறைமுகமான ஜிசானுக்கு அருகே ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்ததாகத் தெரிவித்த பின்னர், ஆபத்து அழைப்பை அனுப்பியதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம் கூறியது.
கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான வான்கார்ட் மற்றும் இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் முகமை ஆகியவையும், அதே பகுதியில் அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று எண்ணெய்க் கப்பல் மீது தாக்கியதில், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளன. இதில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
லைலா என்ற இரண்டாவது கப்பலையும் குறிவைத்ததாக ஹூதிகள் கூறியபோதிலும், அந்த அறிக்கை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
செங்கடலில் உள்ள சவூதி துறைமுகங்களை ஹூதிகள் முற்றுகையிட்டதாக அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படுமோ என்ற கவலைகளை எழுப்பியுள்ளது. சவூதி துறைமுகங்களைத் தவிர்க்குமாறு ஹூதிகள் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, நேற்றுப் புதன்கிழமை அன்று பல எண்ணெய்க் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டதை கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டின.

Post a Comment