துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் உயிரிழப்பு


இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

அத்துருகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்ததுடன் பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். 

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments