கட்டாய இராணுவச் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் தீவிர பழமைவாத யூதர்களின் போராட்டங்கள்


இஸ்ரேலிய இராணுவத்தில் கட்டாயமாகச் சேருவதை எதிர்த்து, பல்லாயிரக்கணக்கான தீவிர பழமைவாத யூதர்கள் நேற்றுத் திங்களன்று இஸ்ரேல் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைகளையும் தொடருந்துகளை மறித்து, கார்களுக்குத் தீ வைத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய சந்திகளை மறித்ததாகவும், போராட்டத்திற்கு அருகே பேருந்திலிருந்து இறங்கிய ஒரு இராணுவ வீரரைத் தாக்கியதாகவும் இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்தது. காவல்துறையினர் நீர்த்தாரை பீரங்கிகள் மற்றும் குதிரைகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் போராடினர்.

இந்த ஆர்ப்பாட்டம் நாட்டின் மையப் பகுதியை பெருமளவில் முடக்கியது; ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் பெருநகரப் பகுதி ஆகிய இரண்டிலும் பெருங்கூட்டத்தால் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இஸ்ரேலில் உள்ள பெரும்பாலான யூத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இராணுவ சேவை கட்டாயமாகும். அரசியல் செல்வாக்கு மிக்க தீவிர பழமைவாதக் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்கள் இராணுவ சேவையைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக மதக் கல்விக்கூடங்களில் படிக்க விலக்குகளைப் பெற்றுள்ளன, ஆனால் அந்த விலக்குகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

இராணுவம் அதன் உச்சகட்ட நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், தீவிர பழமைவாத ஆண்கள் இராணுவ சேவையைத் தவிர்க்க அனுமதித்த நீண்டகால அமைப்பால் பல இஸ்ரேலியர்கள் சோர்வடைந்துள்ளனர். மேலும் பலர் பலமுறை காப்புப் பணியில் பணியாற்றியுள்ளனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணியை இந்தப் பிரச்சினை சிதைத்து வருகிறது. தீவிர பழமைவாத யூதக் கட்சிகள் நெதன்யாகுவுக்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த இலையுதிர்காலத்தில் தேர்தல்கள் பல வாரங்களுக்கு முன்னதாகவே நடைபெற வாய்ப்புள்ளது.

No comments