ஈரானின் பல இலக்குகள் மீது அமெரிக்கா புதிய சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியது!!


ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது மாலை 5:15 மணிக்குத் தாக்குதல்கள் தொடங்கின என்று அமெரிக்க இராணுவக் கட்டளைத் தலைமையகம் தெரிவித்தது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) முதன்மைத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது இன்று புதன்கிழமை கிழக்கு நேரப்படி 17:15 மணிக்கு கூடுதல் தற்காப்புத் தாக்குதல்களை தொடங்கியதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் நியாயமற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சென்ட்காம் மேலும் கூறியது.

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை தெஹ்ரான் சுட்டு வீழ்த்திவிட்டதாக டிரம்ப் கூறியதை அடுத்து, அமெரிக்காவும் செவ்வாயன்று ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இதற்குப் பதிலடியாக, அப்பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரானின் கெஷ்ம் தீவிலும், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட பல நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டுள்ளன.

தாக்குதல் தொடங்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, டிரம்ப் இவ்வாறு எச்சரித்திருந்தார் நேற்று அவர்களைக் கடுமையாகத் தாக்கினோம் இன்றும் அவர்களைக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்.

ஈரானில் உள்ள முக்கிய தளங்கள் மீது குண்டுகள் வீசப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் பின்னர் தெரிவித்தார்.

டிரம்பின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், எந்தவொரு அழுத்தம் அல்லது அச்சுறுத்தலுக்கும் எதிராக ஈரான் உறுதியாக நிற்கும் என்று கூறினார்.

ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டும் அது அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அமைதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாவிட்டால் ஈரான் மீண்டும் தாக்கப்படும் என்று டிரம்ப் கூறியதாகவும் ஹெக்ஸெத் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம், அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் இரண்டு வார காலத்திற்கு நீடிக்கும் நோக்கில் ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அதன் பின்னர், இரு தரப்பினரும் முழு அளவிலான மோதல்களுக்குத் திரும்பாமல், அவ்வப்போது தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இருப்பினும், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் முடங்கியுள்ளதோடு, வான்வழித் தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு உடன்பாட்டைப் பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு ஈரானியத் தலைவர்கள் அதிக காலம் எடுத்துக்கொண்டனர் என்று  'ட்ரூத் சோஷியல்' தளத்தில் டிரம்ப் எழுதினார். அதே நேரத்தில், அமெரிக்கா அனுப்பும் முரண்பாடான செய்தியின் மூலம் ராஜதந்திர செயல்முறையைச் சேதப்படுத்துகிறது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது.

No comments