ஊழல் குற்றச்சாட்டு - முன்னாள் பிரதி அமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு,ஒவ்வொரு குற்றங்களுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தண்டனை காலத்தை ஒன்றன் பின் ஒன்றாக 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, அந்த வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, அவற்றின் உரிமையாளர்களுக்கு சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வழக்கு விசாரணைகளில் குறித்த நான்கு குற்றச்சாட்டுக்களிலும் எதிரியை குற்றவாளியாக கண்ட மன்று , அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பொருளாதாரம் வங்குரோத்தடைவதற்கும் இத்தகைய செயல்கள் வழிவகுத்துள்ளன
அரசு நிறுவனங்களில் இடம்பெறும் இவ்வாறான ஊழல் நடவடிக்கைகள், அந்த நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கக் காரணமாக அமைகின்றன என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இந்தப் பிரதிவாதிக்குத் தண்டனை விதிக்கும் போது, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 303 ஆவது பிரிவின் கீழ் மென்போக்கைக் கையாளுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், இக்குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொள்ளும் போது, அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களைத் ஊக்கமிழக்கச் செய்வதற்கு ஏதுவான வகையிலான தண்டனையொன்றை வழங்க நீதிமன்றம் விதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment