கேப்பாப்புலவில் காணிகளை விடுவிக்காவிடின் வடக்கு ஆளுநர் அலுவலகம் முற்றுகையிடப்படும்
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாளாக இன்றையதினம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும், 3 குடும்பங்களுக்குரிய 11.5 ஏக்கர் தோட்டக்காணிகளுமாக 171 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மக்கள் பூர்வீக வாழ்விடமாக கொண்ட 55.5 ஏக்கர் காணியை முதற்கட்டமாக உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தே மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய, வாழ்க்கையே போராட்டம், போராட்டமே வாழ்க்கை என்ற நிலைக்கு உள்ளாகியிருக்கின்றோம். இனியும் இந்த போராட்டத்தை நீண்ட நாட்களாக வீதியில் இருந்தோ அல்லது மகஜர் வழியாகவோ மேற்கொள்ளாது மிக குறிகிய காலத்திலே எங்களுடைய போராட்டத்தை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளோம்.
ஆளுநரிடம் நாங்கள் விடுத்த கோரிக்கை, இராணுவத்தினால் எங்களிடம் முன்வைக்கப்பட்ட அநீதியான கோரிக்கைகளுக்கு தீர்ப்பு வழங்கி எங்களுடைய காணிகளை பெற்றுத்தர வேண்டும் என்பதே. அல்லது உடனடியாக சாதகமான பதில் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம் இதுவரையும் முடிவில்லை.
ஆளுநர் இங்கு வரவில்லை அல்லது சாதகமான முடிவு தரவில்லை என்றால் நாங்கள் ஆளுநர் செயலகம் சென்று செயலகத்திற்கு முன்பாக எழுச்சி பேரணியை மேற்கொள்வதாக தீர்மானித்துள்ளோம். இதற்கிடையில் எங்களுக்கு சாதகமான பதிலை தரவேண்டும் என கேப்பாபுலவு மக்கள் கோரியுள்ளனர்.

Post a Comment