மஹிந்த நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார் - அருச்சுனா எம்.பி புகழாரம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டுள்ளார் என்றும், அவ்வாறு தன் இனத்தை நேசிக்கும் ஒருவராலேயே ஏனைய இனங்களையும் ஆதரிக்க முடியும் என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
அத்துடன், வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவே நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்றும், அவருடன் பேச்சுகளை நடத்தி தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நாம் நிரந்தரத் தீர்வை காண்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கௌரவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவினால் களுத்துறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றுகையில்,
"நான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை, பொதுமக்களினாலேயே பலவந்தமாக அரசியலுக்குள் தள்ளப்பட்டேன். கடந்த ஒன்றரை வருட காலமாகப் பல சவால்களுக்கு மத்தியில் அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகின்றேன்.
எனது தந்தை ஒரு பயங்கரவாதி என்று தெற்கில் ஒரு தரப்பினர் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். ஆனால், எனது தந்தை இலங்கை பொலிஸ் துறையின் மூன்றாவது உயர் பதவி நிலையில் (உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்) கடமையாற்றியவர் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார். சிங்கள மக்கள் தற்போதும் தங்களின் ஒரே தலைவராக மஹிந்த ராஜபக்ஷவையே பார்க்கின்றார்கள். இந்த நாட்டின் உண்மையான ஜனாதிபதியாக நானும் அவரையே பார்க்கின்றேன்.
பல்வேறு போலி வாக்குறுதிகளை அள்ளி வீசியே தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்றுவரை அவர்கள் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தற்போதைய ஜனாதிபதி போலியான வாக்குறுதிகளை வழங்கி ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளார். அவர் நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூற வேண்டும்; முதலில் தனது மனைவி யார் என்பதையாவது ஜனாதிபதி பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த அரசை நம்பி ஆரம்பத்தில் நிதியுதவிகளை வழங்கியிருந்தன. ஆனால், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இனிமேலும் இந்த அரசை நம்பி ஏமாறப் போவதில்லை, அவர்கள் இந்த ஆட்சிக்கு எவ்வித நிதியுதவிகளையும் வழங்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
சொந்த இனத்தின் மீது பற்றில்லாத ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசின் உறுப்பினர்களால் எவ்வாறு பிறிதொரு இனத்துக்கு ஆதரவாகச் செயற்பட முடியும்? ஆனால், நாமல் ராஜபக்ஷவுக்குத் தன் இனம் மீதான பற்று தெளிவாக உள்ளது. எனவே, அவரே 2029 இல் நாட்டின் ஜனாதிபதியாக வருவார், அவருடன் இணைந்து தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வோம்." - என்றார்.

Post a Comment