ஒரே நாளில் நேபாளத்திலிருந்து 274 மலையேறிகள் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தனர்!!


நேபாளத்திலிருந்து 270-க்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து  புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை நேபாளத்திற்கும் சீனாவின் திபெத் பகுதிக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள 8,849 மீட்டர் (29,032 அடி) உயரமுள்ள சிகரத்தை 274 பேர் ஏறி சாதனை படைத்துள்ளனர் என்றும் இதன் மூலம் 2019 மே 22 அன்று 223 பேர் ஏறி படைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாள மற்றும் சீனத் தரப்புகள் இரண்டையும் சேர்த்து மறுநாள், மே 23, 2019 அன்று, மொத்தம் 354 மலையேறுபவர்கள் உச்சியை அடைந்தபோது புதிய சாதனை படைக்கப்பட்டது.

இந்த ஆண்டு திபெத்தியப் பக்கத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு சீன அதிகாரிகள் எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே தற்போது அனைத்து மலையேற்றங்களும் நேபாளத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். நேற்று முன்தினம் புதன்கிழமை அன்று, உச்சிக்கு அருகில் நூற்றுக்கணக்கான மலையேறுபவர்கள் வரிசையில் காத்திருந்ததை புகைப்படங்களும் காணொளிகளும் காட்டின.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறிய நேபாள சுற்றுலாத் துறை அதிகாரி ஹிமால் கௌதம், அதிக எண்ணிக்கையிலான மலையேறுபவர்கள் இருந்ததால் நெரிசல் எதிர்பார்க்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். 

புதன்கிழமை ஒரு கட்டத்தில், மலையேற்றத்தின் இறுதிப் பகுதியான பால்கனியிலிருந்து உச்சி வரை நீண்ட வரிசை இருந்தது என்று அவர் கூறினார். ஆனால், சிறந்த ஒருங்கிணைப்பின் மூலம் நல்ல நிர்வாகத்திற்காகத் துறை எல்லாவற்றையும் செய்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

No comments