யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை பாதிக்கும்
யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இலங்கை கடற்தொழிலாளர் ஒருவரை கடுமையாக தாக்கி , அவரை இந்தியாவிற்கு கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்து, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை கடற்பரப்பிற்குள் அடிக்கடி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் குறித்து நீண்டகாலமாகவே இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
பல சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்கள் அமைதியான முறையில் நடந்துகொண்டு, இந்திய மீனவர்களை “தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு அணுகியுள்ளனர்
ஆனால், கடந்த காலங்களில் இலங்கை கடல் வளங்கள் பலமுறை சூறையாடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் கடல் சூழலுக்கும் மீன்வள வளங்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய உயர் அதிகாரிகளுடனும், மீன்பிடி துறை அதிகாரிகளுடனும் பல கட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.
இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இணைந்த நடவடிக்கைகள் அவசியம்
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் விரைவான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
இருநாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் அனைத்தும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிதலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment