யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அரியாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட பகுதி சாவகச்சேரி நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால், சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளரின் மகன், விரிவுரையாளரான தனது தாயையும், சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன யுவதியும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் விரிவுரையாளரின் மகளின் காதலன் என கூறப்படும் இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விரிவுரையாளரை கொலை செய்து , சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக கூறியுள்ளார்.

அதனடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments