யாழில். போதைப்பொருளுடன் கைதானவரிடம் இருந்து திருட்டு நகைகள் மீட்பு


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. 

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கடந்த பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி வீடொன்றில் ஒன்பதரை பவுண் தங்க நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணம் ஒன்று களவாடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். 

அதன் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்த பொலிஸார் திருடப்பட்ட நகைகளில் ஒரு தங்கமாலை, ஒரு தங்க மோதிரம், ஒரு சோடி தங்கத் தோடு, 2 தங்க வளையல்கள், 2 தங்கப் பதக்கங்கள் என்பவற்றை மீட்டதுடன் , 08 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தினையும் மீட்டுள்ளனர்

அதேவேளை திருடப்பட்ட தங்க மாலை ஒன்றினை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து பணத்தினை பெற்றமைக்கான பற்று சீட்டு ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அடகு வைத்த தங்க மாலையையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments