யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் எரிபொருள் தொடர்பில் சிக்கல் நிலைமைகள் எழுந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறை(QR Code) தீவகப்பகுதி மக்கள் பயன்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகள், நீண்ட தூரங்களுக்கு பயணிக்கும் பாரஊர்திகளுக்கான எரிபொருள் விநியோக பொறிமுறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம், கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுடன், எரிபொருளுக்காக நீண்ட வரிசை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலாளர்கள் மட்டத்தில் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் க.சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் G.H மாறப்பண, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் எஸ்.சிவகரன், பிரதேச செயலாளர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment