மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு செல்ல 36 வருடங்களாக அனுமதி கோரி காத்திருக்கும் மக்கள்
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அப்பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அதனால் கடந்த 36 வருடங்களாக அப்பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதியை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இம்முறை காணிக்கை மாத ஆலய திருவிழாவை ஆலயத்தில் செய்வதற்கு ஏதுவாக ஆலய சூழலை விடுவித்து தருமாறு, ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , இராணுவ தளபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் , எவ்விதமான சாதகமான பதில்களும் தமக்கு கிடைக்கவில்லை என மயிலிட்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
மயிலிட்டி புனித காணிக்கை மாதா ஆலயமானது 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த ஒரு கத்தோலிக்க ஆலயமாகும்.
இவ் ஆலயத்துடன் இணைந்ததாக மயிலிட்டி றோ.க பாடசாலை,கன்னியர் மடம்,குருவானவரின் பங்கு பணிமனை,கோயிலுக்கு சொந்தமான தோட்டக்காணி உள்ளடங்கலாக அண்ணளவாக 52 பரப்பு கொண்ட இடமாக காணப்படுகின்றது.
எமது ஊரினை வரையறுக்கும் போது முழுவதுமே கடற்கரையை அண்டிய பிரதேசமாக காணப்படுகின்றது. அதாவது பருத்தித்துறை பொன்னாலை வீதிக்கு வடக்கு தெற்காக 300 தொடக்கம் 500 மீற்றர் நீளமான பிரதேசமாக காணப்படுகின்றது.
இதிலும் எமது கோயில் காணியில் ஒரு பகுதியை மட்டுமாவது விடுவிப்பு செய்வதற்குரிய நடவடிக்கையினை செய்து தரும் பட்சத்தில் ஒரு ஆலயத்தினை கட்டி எமது மக்கள் அனைவரும் சேர்ந்து திருப்பலியில் பங்குபற்றி எமது ஆன்மீக தாகத்தினை தீர்த்துக்கொள்வதற்கு எமது ஆலய காணியினை விடுதலை செய்து தாருங்கள்.
ஆலய காணியினை பெற்றுக்கொள்வதற்காக யாழ்பாண ஆயர்,கொழும்பு கர்தினால் ஆயர்,பாதுகாப்பு அமைச்சு, கடற்தொழில் அமைச்சர், யாழ்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்கள், ஜனாதிபதி செயலாளர், இராணுவ அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் இதுவரைக்கும் எந்த ஒரு சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
நாம் வன்முறையினை விரும்பாத மக்களாக எந்த ஒரு அரசியல் செல்வாக்கும் இல்லாதவர்களாக கடவுளின் கையில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, எமது காணிக்கை மாதாவை வழிபட பலவேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

Post a Comment