தற்காலிக புனரமைப்பு: வட்டுவாகல் பாலம் பயன்பாட்டுக்கு வந்தது
வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது.
அண்மைய நாட்களாக பெய்த பலத்த மழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது.
எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு - கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக இரவு பகலாக வேலைகள் இடம்பெற்று வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து நேற்று (03) இரவு 9.45 மணியளவில் இருந்து வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்தினை மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டு வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

Post a Comment