தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கஜேந்திரகுமார் தலைமையிலான குழு தமிழகம் விரைவு
சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை இந்திய அரசு வழங்க வேண்டும். அதற்காக தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்களுடன் பேச்சுக்களை நடாத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் தமிழகம் விரைந்துள்ளனர்.
குறித்த பயணம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசாங்கம் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிள்ளது.
இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்.
அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது.
இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான குறித்த குழுவில், அக் கட்சியின் செயலாளர் , செல்வராசா கஜேந்திரன் , அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் , அக்கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஷ் , அக் கட்சியின் பிரச்சார செயலாளர் சட்டத்தரணி ந. காண்டீபன் ஆகியோருடன் தமிழ் தேசிய பசுமை இயக்கம் பொ, ஐங்கரநேசன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

Post a Comment