ஊடகங்களிற்கு அவசரகாலச் சட்டங்கள்?



புயலால் பாதிப்புற்ற இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பல அமைச்சர்களை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை ; அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசாங்கப் பிரமுகர்களுக்கு எதிராக "தீவிரமான தாக்குதல்கள்" இணையத்தில் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து வருவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளும், அவசரகாலச் சட்டங்களும் பிரயோகிகப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"இணையதளங்கள் மூலமாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியோ தவறான தகவல்களைப் பரப்புவதற்கோ, உண்மைகளைத் திரித்துக் கூறுவதற்கோ அல்லது தற்போதைய சூழ்நிலையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கோ யாருக்கும் அனுமதி இல்லை."

அத்தகைய மீறல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும், சில குற்றங்களுக்கு பத்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments