நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்


யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் ,குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார். 

நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும், வடதாரகை மற்றும் , நெடுந்தாரகை ஆகிய இரு படகுகளின் சேவை நேரம் நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

தற்போது நிலவும் கால நிலையில் விரைவாக இருட்டுவதனால் , படகு சேவைகளை 30 நிமிடங்கள் முன்னதாக மாற்றியுள்ளோம். அதன் அடிப்படையில் நெடுந்தீவில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் படகு , வியாழக்கிழமை முதல் 30 நிமிடங்கள் முன்னதாக 3 மணிக்கு புறப்படும். அதேபோன்று குறிகாட்டுவானில் இருந்து , மாலை 5 மணிக்கு புறப்பட்ட படகு இனி மாலை 4.30 மணிக்கு புறப்படும். 

அதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்து , காலையில் நீண்ட நேரம் குறிகாட்டுவானில் படகுக்கு காத்திருப்பதனால் , ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.45 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் படகு , குறிகாட்டுவான் சென்று மீண்டும் காலை 08 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து தனது சேவையை ஆரம்பிக்கும் என தெரிவித்தார். 

அதேவேளை குமுதினி படகின் நேர ஒழுங்கில் மாற்றம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments