யாழில். வாள் வெட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின் கைது - ஏனையோரையும் கைது செய்ய நடவடிக்கை


யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 31ஆம் திகதி வேலணை நோக்கி காரில் பயணித்த நபரை வேலணை அராலி சந்திக்கு அருகில் பட்டா ரக வாகனத்தில் வழிமறித்த வன்முறை கும்பல் காரில் பயணித்தவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த நபர் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்தனர்.

இந்நிலையில் 10 நாட்களின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன்  சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments