காற்றாலைக்கு நொண்டிச்சாட்டு!
முன்னைய அரசுகள் போல மன்னார் பகுதியில் நடைபெற்று வரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்கள், அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகளை மின்சார அமைச்சர் குமார ஜயக்கொடி நிராகரித்துள்ளார்.
அனுர அரசின் அமைச்சர் ஜயக்கொடி சமீபத்தில் மன்னார் முதல் பூனேரியின் வடக்கு வரையிலான பகுதியை நேரில் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணத்தின் போது, அங்கு பறவைகள் அல்லது விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான எந்த சான்றுகளும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
“மன்னாரில் காற்றாலை அமைப்புகள் பறவைகளின் இடம்பெயர்ச்சியை பாதிக்கும், இயற்கை சூழலை அழிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், நான் பார்த்தபடி, மன்னார் முதல் பூனேரி வடக்கு வரை முழுக்க வெறிச்சோடிய நிலம் தான். மக்கள் பேசும் மாதிரி அங்கு பறவைகள் இருக்கவில்லை” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், சில சமூகக் குழுக்கள் மன்னாரை “சொர்க்கம்” என கூறி, காற்றாலை அமைப்பால் அது அழிவடையும் என தவறான கருத்துக்களை பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், மன்னார் காற்றாலை திட்டம் தற்போது இலங்கையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.
எனினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட மக்கள், இந்தத் திட்டம் பறவைகள் இடம்பெயர்ச்சி பாதைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment