மன்னார் காற்றாலை:போராட்டம் தொடர்கின்றது!
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் தேதி இடம்பெற உள்ளதாக வன்னி நாடாளுளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக் கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியாவில் மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் குறித்த போராட்டம் நடைபெற்றது.
மீன்பிடி தொழில் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு சரணாலயம், இயற்கை காற்றின் வலு முதலானவற்றிற்கு பெயர் பெற்ற இடமாக மன்னார் விளங்குகிறது. இந்தநிலையில் ஏகபோக இராட்சத பல்தேசிய கம்பெனிகளின் இலாப வேட்டையாலும், இலங்கை அரசாங்கங்களின் கையாலாகாத நிலையாலும் அழிவை எதிர் நோக்கி உள்ளது மன்னார் தீவு.
அத்துடன் மன்னார் மண்ணின் கீழ் இருக்கும் இல்மனைட் தோரியம் போன்ற கனிமவளங்கள் இன்றைய நவீன விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இராணுவ தேவைகளுக்காக உலக நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. அதில் முதலீடு செய்வது பெரும் இலாபம் தரும் என்பதால் பல் தேசிய நிறுவனங்கள் முண்டியடிக்கின்றன.
எனவே மன்னாரில் நடைபெற இருக்கின்ற அகழ்வு மன்னார் தீவையே மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு ஆபத்தானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment