தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுகிறது
தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம், அதற்காக எமது மீனவ மக்கள் பதட்டம் அடைய மாட்டார்கள் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவு இலங்கைக்கு உரிய இடம். அதை தமிழகம் கேட்பது நியாயமற்றது. இதை ஏற்கனவே நாங்கள் பல தடவை வலியுறுத்தியுள்ளோம்.
தற்போது இந்தியாவில் தேர்தல் வர இருக்கின்ற நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கச்சதீவு விவகாரத்தை பூதாகரமாக மாற்றி அரசியல் செய்ய பார்க்கிறார்.
கடந்த தேர்தலின் போதும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தற்போதைய தமிழக முதல்வராக இருக்கின்ற மு.க.ஸ்டாலினும் கச்சதீவை மீட்கப் போகிறோம் என தமிழக மீனவ மக்களிடம் பொய் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதேபோன்று இம்முறையும் கச்சதீவை இந்தியா மீள எடுப்பது தொடர்பில் மத்தியில் பேசப்போகிறோம் என தமிழக மீனவர்களை மாற்றும் நாடகம் ஆரம்பமாகியுள்ளது. கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்துவிட்டது.
கச்சதீவை நாம் பெற்றபடியால் அதேபோன்று எட்டு மடங்கு பெரிய கடற்பகுதியை இந்தியாவுக்கு வழங்கியுள்ளோம்.
ஆகவே எமது மீனவர்கள் கச்சதீவு தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் எல்லை தாண்டி எமது கடற்பகுதிக்குள் வருகை தந்தால் இந்தியா மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் என்றார்.
Post a Comment