வடக்கில் மனித புதைகுழிகள் - டக்ளஸிடம் விசாரணை செய்யுங்கள்
மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளுமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சிவஞானம் சிறீதரன், டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கோரினார்.
மேலும் தெரிவிக்கையில்
கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தம் காரணமாக காணமலாக்கப்பட்டவர்களும், படுகொலை செய்யப்பட்டவர்களும் மனித எலும்புக்கூடுகளாகவும், எச்சங்களாகவும் புதைகுழிகளிலிருந்து மீட்கப்படுவதை தாங்களும் அறிவீர்கள்.
அந்தவகையில் மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழமுனை, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளின் வரிசையில் தற்போது யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி பகுதியிலிருந்தும் மனித என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இவை முழுமையாக தமிழ்மக்களுடையவை தான் என்பது தெளிவாகிறது.
குறிப்பாக சிந்துப்பாத்தி மயானத்தை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது மீட்கப்பட்ட கைக்குழந்தைகள், பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியரது என்புக்கூடுகள் எந்த ஆடைகளுமற்று அடித்து நொறுக்கி, சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்களின் என்புக்கூடுகள் என்பதையே நீதித்துறையும், தடயவியல் நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் மனிதப்புதைகுழிகள் மலிந்த இடமாகவே வடக்கு, கிழக்கு பகுதிகள் உள்ளன என்பதை அமைச்சர் அறிவாரா?.
தற்போது யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்திற்கு அருகில் தோண்டி எடுக்கப்படும் மனித என்புக்கூடுகள் தொடர்பில் பக்கச்சார்பில்லாத – நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுமா?, இதற்கு முன்னர் நடைபெற்ற முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் நிறைவுபெற்றுவிட்டதா என்பதையும், அதுசார்ந்து நீதித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை என்பதையும் அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியில், 1990களில் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களுமே புதைக்கப்பட்டார்கள் என வடக்கு, கிழக்கு மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. இது சார்ந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
3ம் வட்டாரம், மண்டைதீவைச் சேர்ந்த திருமதி.சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் 2025.04.30 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதன் பிரதியை எனக்கும் கிடைக்கச் செய்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகளோடு காத்திருக்கும் இந்தத் தாய்மாருக்கு அமைச்சரின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பியதுடன், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் உண்மைநிலை எப்போது வெளிவரும் என்பதை அமைச்சர் இந்த சபைக்கு அறிவிக்க வேண்டும்
1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளிலிருந்து இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எண்பதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலும், மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம் புனித தோமையார் தேவாலய வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய கொலைகள் பற்றியும், இலங்கை இராணுவத்தின் துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டீ.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்தார்
Post a Comment