முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம் - கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் மீண்டும் கரைசேரவில்லை.
குறித்த மீனவர் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
சிலாவத்தை தீர்த்தக்கரையை சேர்ந்த வின்சன்டிபோல் அன்ரனிகருணல் (வயது 62) எனும் மீனவர் நேற்றைய தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்றிருக்கின்றார்
இந்நிலையில் குறித்த மீனவர் சென்ற படகு தனியாக கடலில் மிதந்து வருவதை அவதானித்த சக மீனவர்கள் அது தொடர்பில் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு கடலில் மிதந்து வந்த படகினை கரைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றார்கள்
தென்பகுதி மற்றும் புல்மோட்டை பகுதியில் இருந்து வருகின்ற சட்டவிரோத மீன்பிடியாளர்கள், சாதாரண மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற முல்லைத்தீவு மீனவர்களுடன் தொடர்ச்சியாக முரண்பட்டு வருகின்றனர்.
இதனுடைய பின்னணியாக குறித்த மீனவர் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் வலுப் பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் பயணித்த படகில் படகு இயந்திரத்தில் இன்னும் ஒரு படகு மோதியதற்கான ஆதாரங்களும் இரத்த கரைகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment