சிறைக்கு படையெடுக்கும் மகிந்த அமைச்சர்கள்?



முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக இருந்திருந்த அமைச்சர்கள் பலரும் சிறை சென்றுவருகின்றனர்.

அவ்வகையில் 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக எழுந்த ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம்  நீண்ட கால சிறைத்தண்டனையை இன்று வியாழக்கிழமை விதித்துள்ளது.

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், முன்னாள் வர்த்தக அமைச்சரும் முன்னாள் லங்கா சதோச தலைவருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

அத்துடன் மஹிந்தானந்த அளுகமகேவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும், நளின் பெர்னாண்டோவுக்கு நான்கு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு சிறைத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

2014 செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை இறக்குமதி செய்யப்பட்ட 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 சதுரங்கப் பலகைகள் சம்பந்தப்பட்ட மோசடி கொள்முதல் ஒப்பந்தத்தை மையமாகக் கொண்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால்  வழக்கு தொடரப்பட்டது.

அரசுக்கு ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு ரூ. 53.1 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments