குருந்தூர்:தமிழ் விவசாயிகளிற்கு தொடர்ந்து சிறை!
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு தமிழ் விவசாயிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார்.
குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் காணியின் உரிமையாளர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கடந்த 10ஆம் திகதி குருந்தூர் மலை பகுதியில் இரு விவசாயிகள் உதவியுடன்; உழவு செய்துள்ளார்.
உழவின் போது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள பிக்குவான கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் விவசாயிகள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
முன்னதாக கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து மே 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஞானசார தேரருக்கு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததை மேற்கொண்ட தீர்மானத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை ரத்து செய்யுமாறு கோரி, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
Post a Comment