காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை.


இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அதனால், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

 வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL) இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை. காணிகள் தொடர்பில் அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர். 

வவுனியா மாவட்டத்தில் விரைவில் நடமாடும் சேவை நடத்தி தீர்க்கக் கூடிய காணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதியினது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டையே நானும் வலியுறுத்துகின்றேன் 

மாவட்டச் செயலர்களாக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும்.

 அதனடிப்படையில் இது தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்தார். 

No comments