செய்திக்கு சென்ற ஊடகவியலாளரிற்கு பிடியாணை!



மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலான அரசியல் பழிவாங்கல் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

அதேவேரள நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இலங்கை காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றில் ஆஜராகியிருந்த போராட்டகாரர்கள் 27 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க   2023 ஒக்டோபர் 8 ஆம் திகதி வருகை தந்திருந்தார்.

அப்போது போது, கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற  குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேரை சந்தேக நபர்கள் என குறிப்பிட்டு இலங்கை காவல்துறையால் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத நிலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன்,வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு; கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனுக்கு திறந்த பிடியாணை பிறக்கப்பட்டதுடன் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், நீதிமன்றில் முன்னிலை ஆகியிருந்த   27 போராட்டகாரர்களிற்கும் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.


No comments