எலிக்காய்ச்சல் மரணம் கூடுகின்றது?
யாழில் பரவி வரும் மர்ம காய்ச்சல் “எலிக்காய்ச்சல் என சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகள் மூலம், அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் இரத்தமாதிரி பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களில் சிலர் எலிக்காய்ச்சலால் தான் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.
உயிரிழந்த 7 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பரவிய எலிக்காய்ச்சல் தொடர்பில் நேற்று (11) ஊடகவியலாளர்கிடம் பேசிய வைத்தியர் சத்தியமூர்த்தி, காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் உயிரிழந்தவர்கள் 20 - 65 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது
இதனிடையே யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.

Post a Comment