விசாரணையின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கிய 7 பேர் கைது


விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பகுதியில் இரு சாரார்களுக்கு இடையில் ஏற்பட்ட  முறுகல் நிலைமை தொடர்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் பொலிஸ் அதிகாரி காயமடைந்த நிலையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு சாரார்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில், தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, முறைப்பாட்டாளர் பக்கமாக நின்ற பெண் திடீரென தனது செருப்பினை கழற்றி மறுமுனையில் இருந்த எதிராளியை நோக்கி பல முறை தாக்கியுள்ளார்.

இதன்போது உடனடியாக செயற்பட்ட அப்பொலிஸ் அதிகாரி குறித்த தாக்குதலை நிறுத்துமாறு கோரி சமரசப்படுத்த முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரியை திடீரென குழுவாக இணைந்து தாக்கியுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments