யேர்மனியில் இருந்து புறப்பட்டது நாடு கடத்தல் விமானம்


ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தும் விமானம் யேர்மனியின் லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக சாக்சோனி மாநில உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 2021 இல் காபூலில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கானியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள். இவர்கள் அனைவரும் யேர்மனியில் குற்றங்கள் செய்து தண்டனை பெற்ற குற்றவாளிகள். இதேநேரம் யேர்மனியில் தங்குவதற்கு உரிமை இல்லாதவர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹெபஸ்ட்ரீட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 

பல்வேறு யேர்மன் மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 28 ஆப்கான் குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு கத்தார் ஏர்வேஸ் சார்ட்டர் ஜெட், கிழக்கு மாநிலமான சாக்சோனியின் மிகப்பெரிய நகரமான லீப்ஜிக்கில் இருந்து காலை உள்ளூர் நேரப்படி 6:56 மணிக்கு காபூலுக்கு புறப்பட்டது.  

யேர்மனியின் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்தது.

No comments