நான் பொய் சொல்லவில்லை: வண.ஜோசப் பொன்னையா!



தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பூரண ஆதரவு என்று ஊடகங்களில் வெளிவந்த தகவலை அவர் மறுதலித்துள்ளார்.

அதேபோன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரைத் தவறாக பேசியதாக ஊடகங்களில் வெளிவந்த தகவல் உண்மைக்குப் புறம்பாகத் திரிவுபடுத்திப் பொய்யாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவித்துள்ளார்.

நான் ஓய்வுபெற்று தங்கியிருக்கும் நிலையில் என்னைப் பலர் வந்து சந்தித்துச் செல்கின்றனர். இந்நிலையில் ஊடகவியலாளர்களும் வந்து என்னைச் சந்தித்துச் செல்கின்றனர்.

நான் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோருக்கு எதிராகவும் மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு பூரண ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளதாகப் செய்திகள் வெளிவந்துள்ளன.

நான் அவ்வாறு எதுவும் தெரிவிக்கவில்லை. எமது நாட்டில் சுதந்திரம் வேண்டும். எல்லோரும் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் வாழவேண்டும். அதற்காக யார் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமோ அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும். முடியாதவர்கள் பேசாமல் விடுங்கள் என்றேன். நான் சொன்னதைத் திரிவுபடுத்திப் செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

எனது விருப்பம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும், சமாதானமாக வாழ வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும் எனது விருப்பம். அதனை அன்றும் வலியுறுத்தினேன் இன்றும் அதனை வலியுறுத்துகின்றேன். 


நான் ஓய்வுபெற்றாலும் எனது நோக்கம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதனை விடுத்து ஒருவருக்கு ஒருவர் பிரசாரம் செய்து பொய்யாக சொல்லி தவறான வழியில் செல்வதை நான் விரும்பவில்லையெனவும் ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவித்துள்ளார்.


 

No comments