வீதியில் தமிழக மீனவர்கள்!



இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகு மூழ்கிய நிலையில் இரண்டு மீனவர்களை உயிரிடனும், ஒரு மீனவரின் உடலையும் இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.அதேவேளை காணாமல் போன மற்றொரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகச் சொல்லி மீனவர்களை கைது செய்ய கடற்படை ரோந்து கப்பலில் துரத்தியுள்ளனர். அப்போது தமிழக மீனவர் ஒருவரின்; விசைப்படகில் கடுமையாக மோதியதில், அந்தப் படகு நடுக்கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் தாக்குதலால் விசைப்படகில் இருந்த ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் காணாமல் போயுள்ளார்.இருவர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கொண்டுவரப்பட்டுள்ளனர். இதனிடையே தாக்குதலைக்கண்டித்து ராமேசுவரம் மதுரை தேசிய நெடுங்சாலையில் தமிழக மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முன்னதாக கடந்த ஜூன் 25 அன்று இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களது விசைப் படகை கைப்பற்றி, படகிலிருந்த 10 பேரை கைது செய்திருந்தனர்.கைது நடவடிக்கையின் போது, இலங்கை ரோந்துப் படகிலிருந்த இலங்கை கடற்படை சிப்பாய் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments