புனித ஹஜ் யாத்திரை: உயிரிழந்தவர்களின் 922 ஆக உயிரிழப்பு


இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம்.

இந்தாண்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சவூதியில் வழக்கத்தைவிட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள், குடைகளை பிடித்தபடி, தண்ணீர் அருந்தியபடி தங்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

மக்காவில் அல் ஹராம் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 922ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் எகிப்தை சேர்ந்தவர் 600 என்றும் இந்தியர்கள் 80 என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் வீதியெங்கும் சடலங்கள் கிடப்பதாக கூறப்படுகின்றது.

இறந்தவர்கள் சடலங்கள் மக்காவுக்கு அருகில் உள்ள அல் – மொயிசம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 250 பேர் சுயநினைவு இன்றி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஹஜ் புனித யாத்திரைக்கு முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை சவூதி அரசு செய்கிறது.

அவ்வாறு பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாததாலும் அதிகம் பேர் பலியானதாக கூறப்படுகிறது.

No comments