ரணில் தந்திரிமலையில்:விதுர நல்லூரில்!!
ஜனாதிபதி தந்திரிமலை விகாராதிபதியை சந்தித்து வடக்கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கலிற்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ள நிலையில் குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலையில் தமிழர் வழிபடலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அவைதொல்பொருள் திணைக்களக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பினும் அனைத்து மதத்தவரும் பாரபட்சமின்றி சுதந்திரமாக வழிபட வழி செய்வதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர் விதுர விக்ரமநாயக்க நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலையில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு வகை செய்தல், காங்கேசன்துறையில் உள்ள ஆச்சிரமத்தின் காணி விடுவிப்பு, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்திலுள்ள பெட்டிக்கடைகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்து சமய தலைவர்களினால் முன்வைக்கப்பட்டது.
மேலும் திருகோணமலையில் உள்ள சிறு கடைகளை அகற்றல் மற்றும் காங்கேசன்துறையில் உள்ள சைவாச்சிரமத்தின் காணி விடுவிப்பு தொடர்பிலும் பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சிவபூமி அறக்கட்டளை அமைப்பாளர் கலாநிதி ஆறு. திருமுருகன், ரிஸிதொண்டுநாத சுவாமிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment