“சாமிற்கு” பங்களா பறிபோய்விடும்:கவலை!



தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்தால் ரணில் அரசினால் தனக்கு ஒதுக்கி வழங்கப்பட்டுள்ள சொகுசு வீடு பறி போய்விடுமென இரா.சம்பந்தர் பயப்படுகின்றார்.அதனாலேயே பொது வேட்பாளர் வேண்டாமென இரா.சம்பந்தன் கதறுவதாக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ் பொது வேட்பாளரை தேடி பிடிப்பதற்குள் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு விடும் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரான,சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். 

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி தேர்தல் விடயம் சம்பந்தமாக எங்களுடைய கட்சி ஒரு முடிவிற்கு வரவில்லை. ஆனால் தனிப்பட்ட வகையில் என்னைப் பொறுத்தவரையில் தமிழ் பொது வேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. 

எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய பொது வேட்பாளரை தேடிப் பிடிபதற்குள்ளேயே முரண்பாடு பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமைகள் அப்படித் தான் இருக்கிறது. 

எனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தரப்புடன் நாம் பேரம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு  ஒற்றுமையாக பலமாக நாங்கள் இருக்க வேண்டும்.

ஆனால் ஒரு பொது வேட்பாளர் என்றால் ஏனைய வேட்பாளர்களோடு நாங்கள் சமநிலையில் நிற்கிற பொழுது சில சமயங்களில் எங்களது பேரம் பேசும் பலம் குறைவாக இருக்கலாம்.  அல்லது அவர்கள் எங்களடு பேரம் பேசாமலும் போகலாம். 

அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் தெரிவு பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய வாய்ப்பாகவும் அமையும் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜேவிபியின் மக்கள் சந்திப்பில் அழையா விருந்தாளியாகவே எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்திருந்ததாக யாழ்.மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , ‘‘தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையிலான எந்தவொரு முன்மொழிவும் ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி எனக் கூறப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் உள்ளடங்கவில்லை. இவ்வாறான பின்புலத்தில் ஈழத்தமிழர்கள் எவ்வாறு அவருக்கு வாக்குகளை வழங்குவார்கள்‘‘ என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.


No comments