இந்திய பின்னணியில் ஈஸ்டர் தாக்குதலாம்?



உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் செயற்பட்டுள்ளார்  என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள். ஆனால் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.

அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது. இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.

தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்சவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை. ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய  தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியதுஎன தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.


 

No comments